இந்திய செய்திகள்

தமிழக சுற்றுலாத்திட்டங்களுக்கு ரூ.309.15 கோடி ஒதுக்கீடு.

தமிழக சுற்றுலாத்திட்டங்களுக்கு ரூ.309.15 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல்

தமிழகத்தில் சுற்றுலா மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசின் சுதேசி தரிசனம், பிரசாத் எனப்படும் பாரம்பரிய ஆன்மீக சுற்றுலா மேம்பாடு மற்றும் சுற்றுலா கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்காக மத்திய அமைப்புகளுக்கான நிதியுதவி போன்ற திட்டங்களின் கீழ், ரூ. 309.15 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய கலாச்சாரம்  மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

 மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ள அவர், நீடித்த மற்றும் பொறுப்பான சுற்றுலாத்தலங்களை மேம்படுத்துவதற்கான சுதேசி தரிசனம் 2.0 திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மாமல்லபுரம் மற்றும் நீலகிரி ஆகிய பகுதிகள் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், கடற்கரை கோவிலில் ஆழ்ந்த அனுபவம் திட்டத்திற்காக 2023-24 நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.30.02 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பிரசாத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 21 புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் உள்ள நவக்கிரக ஸ்தலங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதில்

  1. ஸ்ரீ கைலாசநாதர் கோயில், திங்களூர், தஞ்சை மாவட்டம்
  2. குருபகவான் கோயில், ஆலங்குடி, தஞ்சை மாவட்டம்
  3. ஸ்ரீ நாகநாதர் கோயில், திருநாகேஸ்வரம், தஞ்சை மாவட்டம்
  4. ஸ்ரீ சூரியனார் கோயில், திருவிடை மருதூர், தஞ்சை மாவட்டம்
  5. ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில், கஞ்சனூர், தஞ்சை மாவட்டம்
  6. ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில், வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை மாவட்டம்
  7. ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில், கீழபெரும்பள்ளம், மயிலாடுதுறை மாவட்டம்
  8. சுவேதாரண்யேஸ்வரர் கோயில், திருவெண்காடு, மயிலாடுதுறை மாவட்டம்

ஆகிய 8 இடங்களில் சுற்றுலா மேம்பாட்டுத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், மாநிலங்களுக்கான மூலதன முதலீட்டிற்கான சிறப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ், மாமல்லபுரத்தில், நந்தவனம் பாரம்பரிய பூங்கா அமைப்பதற்காக ரூ.99.67 கோடியும், ஊட்டி அருகே உள்ள தேவாலா-வில் மலர்த்தோட்டம் அமைப்பதற்காக ரூ. 70.23 கோடியும் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுதேசி தரிசனத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கடலோர சுற்றுலா மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், சென்னை- மாமல்லபுரம்- ராமேஸ்வரம்- மணப்பாடு- கன்னியாகுமரி ஆகிய இடங்களில் ரூ. 73.13 கோடி செலவில் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, பிரசாத் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரத்தில் ரூ.13.99 கோடி செலவிலும், வேளாங்கண்ணியில் ரூ. 4.86 கோடி செலவிலும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், மத்திய அமைப்புகள் மூலம் சுற்றுலா கட்டமைப்பு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள, சென்னை துறைமுகத்தில் தற்போதுள்ள பயணிகள் முனையத்தில், கப்பல் சுற்றுலா பயணிகள் வசதி மையம் ரூ. 17. 25 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

Related Posts